தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் முன்பு காரைக்குடி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராசகுமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு, மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி காரைக்குடி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராசகுமார், டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முன்பு கையில் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், ராசகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, உரிய அதிகாரியிடம் அளிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டதை கைவிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராசகுமார், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள், ஓட்டுக்கு பணம் கொடுத்ததாகவும், இதுதொடர்பான புகார்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஆதங்கம் தெரிவித்தார்.







