சாதிய அடக்குமுறை எந்த கட்சிக்குள் இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித்தின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் கடைசிப்படமாக அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் கடந்த மாதம் ஜூன் 29-ம் தேதி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படம் முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாமன்னன் படத்தை பாராட்டிய பா.ரஞ்சித் திமுகவில் உள்ள சாதியப்பாகுபாட்டை களைய உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்வீட் செய்து இருந்தார்.
இது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூகநீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.
உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூகநீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ் , வடிவேலு மற்றும் படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார்.
https://twitter.com/beemji/status/1675703326141448194
பா.ரஞ்சித்துக்கு அமைச்சர் உதயநிதி பதில்:
இயக்குநர் பா.ரஞ்சித்தின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாமன்னன்’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் – ஏற்றத்தாழ்வும் திமுக மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது திமுக.
ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி’யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது திமுக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் தலைவரும் இப்பணியைத் தொடர்கிறார்.
https://twitter.com/udhaystalin/status/1675800345707151362?s=46
`பராசக்தி’யில் தொடங்கி `மாமன்னன்’ வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி’யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும் கூட.
ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.





