தொடரும் போராட்டம் | #Samsung நிறுவன மேலாளர்களுடன் அமைச்சர் டிஆர்பி ராஜா பேச்சுவார்த்தை!

சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அமைச்சர் டிஆர்பி ராஜா சாம்சங் நிறுவன மேலாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு…

Minister TRP Raja today held talks with Samsung company managers as Samsung workers are on strike.

சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அமைச்சர் டிஆர்பி ராஜா சாம்சங் நிறுவன மேலாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 9ம்தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 1500-க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு மற்றும் ஆலையில் சங்கத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.போராடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஆலை நிர்வாகம் தெரிவித்தது. அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : Karthi | ‘வா வாத்தியார்’ ரிலீஸ் எப்போது? வெளியான புதிய தகவல்!

இந்நிலையில், சாம்சங் நிறுவனத்துடன் முதல் சுற்று பேச்சுவார்த்தையை அமைச்சர் டிஆர்பி ராஜா நடத்தினார். இன்று காலை 9 மணியளவில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், சாம்சங் நிறுவனத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது :

” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி, இன்று காலை சாம்சங் நிறுவன மேலாளர்களுடனான சந்திப்பின் போது, நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்கப் பயனுள்ள உரையாடலை நடத்தினோம். மேலும், இப்பிரச்னையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் இணைந்து, தொழிலாளர்களுக்கு நன்மையான தீர்வு கிடைப்பதற்கான முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சாம்சங் நிர்வாகத்தினரும் அவர்களின் ஊழியர்களும் இணைந்து, எல்லா தரப்புக்கும் பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவார்கள் என உறுதியுடன் நம்புகிறோம்”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.