போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை அமைச்சர் சிவசங்கரால் சமாளிக்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டின் முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி அடைய வேண்டும் என 2 நாட்களுக்கு முன் நாங்கள் சொல்லி இருந்தோம். இந்த யாத்திரையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடம் என்பது, எந்த அளவு வேலைவாய்ப்பு இல்லாத நிலை இருக்கிறது என்பதை எங்களால் தெரிந்துகொள்ள முடிந்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 34% உற்பத்தித்திறன் உள்ளது. உலகில் இருக்கும் அனைத்து பெரிய முதலீட்டாளர்கள் அனைவரும், இந்தியாவை ஒரு அதிக வருவாய் கொடுக்க கூடிய இடமாக பார்க்கிறார்கள் என பிரதமர் சொல்லி இருந்தார்.
தற்போது தமிழ்நாடு அரசு 6.6 லட்சம் கோடி முதலீடுகளை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். 10 லட்சம் கோடி நாங்கள் எதிர்பார்த்தோம். உத்தரப்பிரதேசத்தின் குண்டல்கட் எனும் இடத்தில் 9 லட்சம் கோடி முதலீட்டை பெற்றுள்ளனர். குஜராத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு நாளை தொடங்குகிறது. அந்த முதலீட்டாளர் மாநாட்டிற்கு முன்பே, 7 லட்சம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்களை கையெழுத்திடப்பட்டுள்ளது.
அடுத்த படியாக 3 நாட்கள் கடந்த பின் குஜராத்தின் ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்பு வெளியில் வரும். இதன் மூலம் தமிழக அரசு எந்த அளவிற்கு டார்கட் வைத்து உழைக்க வேண்டும் என்பது தெரிகிறது. இந்த அரசு அதானியை குறைகூறிக் கொண்டு வருகிறது. ஆனால் இன்று அதானியிடம் இருந்து 42 ஆயிரம் கோடிக்கு மேலான முதலீடுகள் வந்திருப்பதை அடுத்து, அதானிக்கு நன்றி சொல்லி வருகிறார்கள். தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடுகள் திமுகவிற்காக வரவில்லை; பிரதமர் நரேந்திர மோடிக்காக வந்தது.
தமிழகத்தில் வளர்ச்சி குறைவாக இருக்க வேண்டிய மாவட்டங்களுக்கு இன்னும் நாம் ஊக்கம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தால் மட்டும் ஏன் 33 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க முடிந்தது? நம்மால் ஏன் முடியவில்லை? எனும் கேள்வியைக் கேட்டுக் கொண்டு, அடுத்த வரும் ஆண்டுகளில் இன்னும் பல முதலீடுகளை ஈர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
மத்திய அரசை பொறுத்த வரை, அமைச்சர் பியூஸ் கோயல் தமிழ்நாட்டுக்கு என்ன ஒத்துழைப்பு வேண்டுமோ அதனை செய்து கொடுக்கச் சொல்லிக் கூறி இருக்கிறார். நமது என் மண், என் மக்கள் யாத்திரை 144 தொகுதிகளை எட்டி இருக்கிறது. இதன் மூலம் நாம் எந்த அளவு தமிழகத்தின் அரசியல் பாதையை மாற்ற வேண்டும் என்பதை எங்களால் உணர முடிந்தது.
இந்தியாவில் பல இடங்களில் ஆட்சியிலும், பல இடங்களில் எதிர்க்கட்சியாக, வளர்ச்சி அடைந்து வருகிறோம். இப்போதைக்கு பாஜக 2024 தேர்தல் என்பதை பேசவோ, யோசிக்கவும் கூட இல்லை. என்னை பொறுத்தவரை மோடி அவர்களை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் எங்களோடு பயணியுங்கள் என நாங்கள் சொல்கிறோம்.
யாருமே இங்கே ஆட்டு மந்தைகள் கிடையாது. யார் கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதை என்னால் கூற முடியாது. 2014 மற்றும் 2019 தேர்தல்கள் வேறு.2024 தேர்தலுக்கு பாஜக தயாராக இருக்கிறது என்று என்னால் கூற முடியாது, எனக்கு அதற்கு அதிகாரம் இல்லை. 2024 இல் மூன்றாவது முறையாக மீண்டும் மோடி தான் ஆட்சி அமைக்க போகிறார் என அனைவருக்கும் தெரியும். நல்லாட்சியை நிரூபிக்கும் இடத்தில் பாஜக இருக்கிறது. முதல் 10 ஆண்டுகளில் எங்களது ஆட்சி எப்படி இருந்தது என தெரியும்.
என்னதான் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வந்து பேசினாலும், அதனை ஏற்கும் தன்மை அமைச்சர் சிவசங்கருக்கு இல்லை. தமிழ்நாட்டின் நிதி சூழல் அவ்வளவு சிக்கலாக உள்ளது. தமிழ்நாடு அரசு 8,25,000 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை வரும். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற போதுமான நிதி சூழல் தமிழ்நாடு அரசிடம் இல்லை.
இன்று பேருந்துகள் இயங்கும், ஆனால் இரவும் அதே ஓட்டுநர்கள் ஓட்டுவார்களா? பொங்கல் அன்று என்ன செய்வார்கள்? அமைச்சர் சிவசங்கரால் இதனை சமாளிக்க முடியாது. ஒரு ரேஷன் கார்டு மீது 3,66,000 ரூபாய் கடன் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் நிற்க கூடியவர்கள் மூத்த தலைவர்களே. அவர்களை எங்கு நிற்க வைக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ற பட்டியல் தலைமையிடம் மட்டுமே உள்ளது.
வெள்ள நிவாரண நிதியை நிச்சயமாக கொடுக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு அதிகமாக கேட்கிறார்கள். விளையாட்டுத் துறையில் செலவு பண்ண வேண்டிய பணம் எல்லாம் வேறு துறையில் செலவு செய்திருக்கலாம். ஆனால் உதயநிதி தனக்கு வெளிச்சம் ஏற்படுத்தவே இதனை செய்து வருகிறார் என்பது போல எனது பார்வையில் தெரிகிறது.
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.







