உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மருத்துவமனை அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுரையின் அடையாளமாக சுமார் 800 ஆண்டுகள் பழமையான மீனாட்சியம்மன் கோயில் இருந்து வருகிறது. இக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணமுள்ளனர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் முதலுதவி அளிக்கும் வகையில் மருத்துவமனை அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கோயில் வளாகத்திற்குள் அமைக்கப்பட உள்ள மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள்,பல்நோக்கு பணியாளர்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் கோயிலில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு 20 விதிமுறைகள் விதித்து கோவில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, துணை ஆணையர், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.