பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க அரசை வலியுறுத்துவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் மனிதப் பிறவி விழுமியது. அரிதாய் பெற்ற மனிதப் பிறவியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்றால், நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற வேண்டுமென்றால், சுற்றுப்புறம் சுகாதாரமாக இருப்பதோடு, தரமான உணவும், பாதுகாக்கப்பட்ட குடிநீரும் உறுதி செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர்,
கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக, வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், கிராமப்புறங்களிலிருந்தும் சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவ்வாறு வருபவர்கள் அனைவரும், சென்னையில் உள்ள உணவகங்களை நம்பித்தான் உள்ளனர். இதற்கேற்ப உணவகங்களின் எண்ணிக்கையும், உணவு விடுதிகளும், நடமாடும் உணவகங்களும் பெருகிக் கொண்டே வருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெரும்பாலான சைவ மற்றும் அசைவ உணவகங்களில் தரமற்ற உணவு விநியோகிக்கப்படுவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறையினரின் ஆய்வு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. மிகப் பெரிய உணவகங்களில்கூட, சமையலறை சுகாதாரமற்ற முறையிலிருந்ததையும், துர்நாற்றம் வீசும் அளவிலிருந்ததையும், உணவுப் பொருட்களில் புழு, பூச்சி இருந்ததையும், தரம் மிகவும் குறைவாக இருந்ததையும், சில உணவகங்களில் கெட்டுப் போன இறைச்சி வைக்கப்பட்டு இருந்ததையும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர் எனத் தெரிவித்துள்ள அவர், காய்கறிகள் மற்றும் பழங்கள் ரசாயனங்களைக் கொண்டு பளபளப்பாக மாற்றப்படுவதாகவும், அப்பளத்தில் ரசாயனம் சேர்க்கப்படுவதாகவும், அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வருவதாகக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலமுறை மேற்கொள்ளும் அளவுக்கு பணியாளர்கள், வாகன வசதிகள் மற்றும் இதர வசதிகள் இல்லை என்றும், உணவகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பாதுகாப்புத் துறை மேம்படுத்தப்படவில்லை என்று குறிப்பிடுவதாகத் தெரிவித்துள்ள அவர், சமூக ஆர்வலர்களோ, சுகாதாரமற்ற உணவுகளைத் தயாரிக்கும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். மேலும், தரமற்ற உணவு காரணமாக, உணவகங்களை நம்பி வசிப்போர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், உயிருக்கு உலை வைக்கும் தரமற்ற உணவுகளைத் தயாரிக்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து உணவகங்களிலும் காலமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/OfficeOfOPS/status/1561174104425709568?t=lfIXR-X_wQU8W_SJMS68MA&s=08
இல்லையெனில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இதன்மூலம் மருத்துவத் துறை மிகப் பெரிய சவாலைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ள அவர், “வருமுன் காப்போம்” என்பதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏற்கெனவே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் எனப் பல நோய்களால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தரமற்ற உணவுகள் உணவகங்களில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவது மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தி, ஆரோக்கியமற்ற சமுதாயத்தை உருவாக்க வழிவகுக்கும். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு எனக் கூறியுள்ளதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தனிக் கவனம் செலுத்தி, உணவகங்களின் எண்ணிக்கைக்கேற்ப உணவுப் பாதுகாப்புத் துறையினை மேம்படுத்தி, காலமுறை ஆய்வுகளை மேற்கொண்டு, இனி வருங்காலங்களில் அனைவருக்கும் தரமான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.








