‘பிரபஞ்ச அழகி’ போட்டியில் இனி திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும், தாய்மார்களும் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
‘பிரபஞ்ச அழகி’ (Miss Universe) போட்டியில் இனி திருமணமான பெண்களும் கர்ப்பிணிகளும் தாய்மார்களும் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ‘பிரபஞ்ச அழகி’ போட்டியில் கலந்து கொள்ள 28 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். திருமணம் செய்திருக்கக்கூடாது, குழந்தை பெற்றிருக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இருந்து வந்தன.
இந்த நிலையில் இனி ‘பிரபஞ்ச அழகி’ போட்டியில் திருமணமானவர்களும், குழந்தைகளை பெற்ற அம்மாக்களும் கலந்து கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது வெற்றிக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதை கருதி, இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக போட்டி நடத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு (2023) முதல் அமலுக்கு வர உள்ளது. ‘பிரபஞ்ச அழகி’ போட்டியில் புதுவித புரட்சியை ஏற்படுத்தும் விதமாக செய்யப்பட்டிருக்கும் இந்த விதி மாற்றத்தை பலரும் வரவேற்று வருகின்றனர்.
2020ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற மெக்சிகோவை சேர்ந்த் ஆண்ட்ரியா மெசா இதுகுறித்து கூறுகையில், இந்த புதிய மாற்றம் வரவேற்றத்தக்கது என்றும், இதற்கு முந்தைய விதிகள் யதார்த்தமற்றதாக இருந்நதாக கூறினார். மேலும், ஒரு சிலர், பெண்களுடன் உறவு வைப்பதற்காக இந்த மாற்றத்தை விரும்பவில்லை என்றும், அதுபோன்றவர்கள் எப்போதும் அழகான பெண்களை பார்க்கவே ஆசைப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பிரபஞ்ச அழகி போட்டியில் சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். உலகெங்கிலும் உள்ள 160 பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் இந்த நிகழ்வு ஒளிபரப்பப்படுகிறது. முதல் பிரபஞ்ச அழகி போட்டி 1952ம் ஆண்டு கலிபோர்னியாவின் லாங் பீச்சில் நடைபெற்றது. முதல் பட்டத்தை வென்ற பின்லாந்தின் ஆர்மி குசேலா, தனது பதவிக்காலம் முடிவதற்குள் திருமணம் செய்து கொள்வதற்காக தனது பிரபஞ்ச அழகிக்கான கிரீடத்தை துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







