மங்களூரில் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு IRC என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோ குக்கர் குண்டுவெடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகமது ஷாரிக் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கர்நாடகா காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முகமது ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, சென்னை வந்து சென்றது விசாரணையில் அம்பலமானது. யாரை சந்தித்து சென்றார் என்ற கோணங்களில் விசாரணை நீண்டு கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐஆர்சி என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தட்சினகன்னடா மாவட்டம் கத்ரியில் உள்ள மஞ்சுநாத் கோவிலை முகம்மது ஷாரிக் தகர்க்க திட்டமிட்டதாக அந்த அமைப்பு வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது. இந்த முயற்சியில் இலக்கை அடையவில்லை என்றாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
போலீசார் கட்டுப்பாட்டில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக் புகைப்படத்துடன் இந்த கடிதம் வைரலாகி வருகிறது. இந்த கடிதம் குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “இது போன்ற ஒரு அமைப்பை இதுவரை அறிந்தது இல்லை. உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.