கனடாவில் மகாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கனடாவின் டொரோன்டோ நகரில் உள்ள விஷ்ணு கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் அமைதி பூங்காவில் மகாத்மா காந்தி சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. 20 அடி உயரம் கொண்ட அந்த சிலையை மர்ம நபர்கள் சிலர் அவமதிப்பு செய்துள்ளனர்.நேற்று அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. காந்தி சிலை அவமதிப்பு செய்யப்பட்டது கனடாவில் உள்ள இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கனடாவில் உள்ள இந்தியர்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த குற்றச் செயல் நிகழ்த்தப்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கனடாவில் வாழும் இந்திய வம்சாவளியினரிடையே பாதுகாப்பின்மையையும், கவலையையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் அந்த டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி சிலையை அவமதித்த குற்றவாளிகளை கண்டு பிடித்து நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா சார்பாக வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச் செயல், கனடாவில் வாழும் இந்தியர்களின் மனதை ஆழமாக புண்படுத்தியிருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.







