மகாராஷ்டிரா மாநிலம் சின்னார் ஷீரடி நெடுஞ்சாலையில் லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்துக்குளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கம். ஷீரடி கோயில் மற்றும், சாய்பாபா வாழ்ந்த இடத்திற்கு ஏரளாமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் இருந்து 50 பயணிகளுடன் ஷீரடிக்கு சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தானது நாசிக்கின் பத்தரே கிராமத்திற்கு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சின்னாரில் உள்ள கிராம மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடபட்டனர். மேலும் விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்ராந் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தள்ளார். மேலும், விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தவும் முதலமைச்சர் உத்தவிட்டுள்ளார்.







