தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் தனிப்பெரும்பான்மை பெற்று திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் யார் என்று கேள்வி கட்சியினர் மத்தியில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
1971ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுரை மாநகராட்சியின் முதல் மேயராக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் முரட்டு பிள்ளை என செல்லமாக அழைக்கப்படும் மதுரை முத்து தேர்வானார். பின் தொடர்ச்சியாக எஸ்.கே.பாலகிருஷ்ணன், பட்டுராஜன், குழந்தைவேலு, செ.ராமச்சந்திரன், தேன்மொழி கோபிநாதன், ராஜன் செல்லப்பா என இதுவரை 7 மேயர்களை கண்டுள்ளது அந்த மாநகராட்சி. அதில் மதுரை திமுக பிரமுகரான கோபிநாதனின் மனைவி தேன்மொழி 2006ஆம் ஆண்டு முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது திமுக கூட்டணி 80 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், மேயர் தேர்வில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற சிக்கல் நீடித்து வருகிறது. மதுரை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நிறைய பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் , மூர்த்தி என இருவர் மேயர் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் மருமகள் விஜயமெளசுமியும், தங்கம் தென்னரசு உறவினரான பொம்முதேவன் மகள் ரோகிணியும், அமைச்சர் ராஜகண்ணப்பனின் உறவினரான வாசுகி சசிக்குமாரும் மேயர் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளனர். மேலும் பிடிஆர் ஆதரவாளர் வழக்கறிஞர் பொன்.வசந்த் மனைவி இந்திராணி மற்றும் பாமா முருகன் முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் மகள் விஜயலெட்சுமி, மாவட்ட செயலாளர் கோ.தளபதி உறவினரான இந்திராகாந்தியும் ரேசில் உள்ளனர்.
– மா.நிருபன் சக்கரவர்த்தி