அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது.
இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டப்படி, சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் தான், ஜாமீன் மனு மட்டுமல்லாமல், முழு வழக்கையும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கு ஆவணங்களை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செப்டம்பர் 11ம் தேதியான இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
இந்த மனு முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது,
அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் D.R.அருண் குமார் ஆஜராகி, குறுகிய காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, வரும் வெள்ளிக்கிழமைக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி அல்லிக, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.