மாணவர்கள் என்னவாக வர வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்து கொள்வார்கள்; அதற்கான அறிவு அவர்களுக்கு உள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் பிரபல கல்லூரிகளின் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட “கல்வி கண்காட்சி” கோவை கொடிசீயா மைதானத்தில் நேற்று (ஜூன் 18) தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இக்கண்காட்சியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் பிரபலமான 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்றுள்ளன. சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் சமீரன், நாடாளுமன்ற உறுப்பினர் நடரசன், ஐபிஎஸ் அதிகாரி ரவி ஆகியோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து இரண்டாவது நாளான இன்று கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடக்கி வைத்தார். நகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல் அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் சிறப்புரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ், சமுதாயத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என சிந்திக்கும் நியூஸ்7 தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் இன்னும் வர வேண்டும்; தொலைக்காட்சிகளில் முதன்முறையாக நியூஸ்7 தமிழ் இது போன்ற கல்வி கண்காட்சியை நடத்தியுள்ளது பெருமைக்குரியது என்று பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்புக்கு பிறகு என்ன படிப்பை தேர்வு செய்ய வேண்டும், அவர்களின் உயர்கல்விக்கான ஆலோசனைகளை வழங்குதல், 11ஆம் 12ஆம் வகுப்பு எந்த படிப்பை தேர்வு செய்தால் என்ன வேலை கிடைக்கும், இளநிலைப் படித்தால் என்ன வேலை கிடைக்கும், முதுநிலை படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பதை எடுத்துக்கூறும் திட்டம்தான் நான் முதல்வன் திட்டம்.
கல்லூரி மாணவர்கள் உங்களின் தனித் திறமை என்ன என்பது குறித்து முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களின் தனித்திறமையை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் இருக்கிறது. எதிர்வீட்டில் மருத்துவர் ஆகிவிட்டார் நீங்களும் மருத்துவராக வேண்டும் என்றும் பக்கத்து வீட்டில் மருத்துவர் ஆகிவிட்டார் எனவே நீங்களும் மருத்துவர் ஆகுங்கள் என குழந்தைகளிடத்தில் சொல்ல வேண்டாம். எங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் என்னவாக வேண்டும் என்ற அறிவு அதிகமாகவே இருக்கிறது. எனவே அவர்களை அவர்கள் பக்கமே விட்டு விடுங்கள்.
வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் என்னென்ன துறைகள் இருக்கிறது, எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம், துறையை தேர்வு செய்தவர்கள் எங்கு வேலை செய்து வருகின்றனர், எந்த மாதிரியான சில வேலைகள் கிடைக்கும், என்னென்ன சான்றிதழ்கள் தேவை, எந்தெந்த கல்வி உதவித் தொகைக்கு நாம் அப்ளை செய்யவேண்டும் உள்ளிட்ட அனைத்தும் இந்த கண்காட்சியில் ஒரு குடையின்கீழ் தெரிந்துகொள்ளலாம்.
இளைய சமுதாயமான நீங்கள் பெரிய இடத்துக்கு சென்று இன்று அன்பில் மகேஸ் நிற்கும் இடத்தில் நின்று பேசவேண்டும் என ஆசைப்படுகிறேன்” என அமைச்சர் தனது உரையில் பேசினார்.