தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் குறைந்திருப்பதுடன், வெளிமாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை திடீரென அதிகரித்து மொத்த விலையில் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. அவ்வப்போது ஒரு சில நாள்கள் மட்டும் விலை சற்று குறைந்த போதும், தொடா்ந்து அதிகரித்தே வருகிறது.
விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் 82 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இந்த கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, கடந்த சில நாள்களாக மொத்த விற்பனையில் கோயம்பேடு சந்தையில், ரூ.80 வரை விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படிப்படியாக விலை அதிகரித்து திங்கள்கிழமை 1 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனையில், பல இடங்களில் ரூ.120 ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் புதன்கிழமை தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தக்காளி மொத்த விலையில் ரூ.10 அதிகரித்து ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கோயம்பேடு சந்தையிலிருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மொத்த விலையிலும் சில்லறையாகவும் இவை விற்பனை செய்யப்படுகின்றன. கா்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் ஹிமாசலபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் பரவலாக கன மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால், இனிவரும் நாள்களில் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.







