224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2018ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும் காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்ற வேண்டும். ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணமாக காங்கிரஸ் மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த ஆட்சி 14 மாதங்களில் கலைக்கப்பட்ட நிலையில், பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தற்போது முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்று வரும், அவரின் பதவி காலம் மே 24-ந் தேதியுடன் நிறைவடையும் நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிரமாக பிரச்சாரத்தில் செயல்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பா.ஜ.க. 189 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், இன்று மனுதாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் கர்நாடக தேர்தல் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்த வாரத்தில் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வேட்பாளருடன் யார் செல்ல வேண்டும் என்று ஏற்கனவே உறுதி படுத்தப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், இன்று தொடங்கியுள்ள வேட்புமனு தாக்கல் தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை. வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும்போது, உடன் 4 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனு படிவம் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதே போல் கர்நாடகத்தில் முதன் முறையாக ஆன்லைன் மூலமாக வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. குஜராத்தில் நடந்த தேர்தலின் போது முதல் முறையாக ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டு இருந்தது. தற்போது கர்நாடகத்திலும் அந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இணையத்தின் மூலம் பதிவு செய்யும் போது, அதில் தகவல்களை நிரப்பி, அதன் அச்சை நகல் எடுத்து, அதனை தேர்தல் அதிகாரியிடம், மனுவாக தாக்கல் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதே போல் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் ஆன்லைனிலேயே நிரப்பி அதன் நகலை எடுத்து, அந்த நகலில் நோட்டரி வக்கீலின் கையெழுத்து பெற்று தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 20ம் தேதி கடைசி நாள் ஆகும். 21-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. 24-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். மேலும் வேட்பாளர்களுக்கு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- பி.ஜேம்ஸ் லிசா