மனித குலம் விடுதலை பெற கூர்மையான தத்துவத்தை வகுத்து கொடுத்த தத்துவவியலாளர் கார்ல் மார்க்ஸின் 139ம் ஆண்டு நினைவு தினம் இன்று.
நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது என்றார் மானுட மாமேதை கார்ல் மார்க்ஸ். ஆளும் வர்க்கத்துக்கு எதிராகவும், பாட்டாளி வர்க்கத்துக்கு ஆதரவாகவும் தொடர்ந்து குரல் கொடுத்ததால் பல்வேறு நாடுகளில் இருந்து துரத்தப்பட்டவர், மாபெரும் சிந்தனையாளர் மார்க்ஸ். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவரான கார்ல் மார்க்ஸ், அரசியல், வரலாறு, பொருளாதாரத்தில் வல்லுனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தலைசிறந்த ஆய்வறிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், புரட்சியாளர் என பல்வேறு தளங்களில் சீற்றத்தோடு இயங்கிய மார்க்ஸ் காதலுக்கும் பேராசான். தன் காதலிக்காக அவர் எழுதிய கடிதங்கள் தான் மார்க்ஸ் சித்தாந்தத்தின் ஆரம்ப புள்ளி. மனித குலத்தின் வரலாற்றை துல்லியமாக அறிந்து அதனை மாற்றி எழுதிய மார்க்ஸுக்கு அவர் காதலி ஜென்னி தான் அசாதாரண சூழ்நிலையிலும் உறுதுணையாக இருந்தார்.
தன்னைவிட 4 வயது மூத்த பிரபுத்துவ குடும்ப வாரிசான ஜென்னியை காதலித்து கரம்பிடித்து வாழ்க்கையை தொடங்கினார் மார்க்ஸ்… நிரந்தரமற்ற வேலை, ஆளும் வர்க்கம் கொடுத்த நெருக்கடிகள் என அவர் சந்தித்த துன்பங்கள் ஏராளம். மார்க்ஸின் கண் முன்னே அவரது குழந்தைகள் ஒவ்வொருவராக பசியால் மடிந்துக்கொண்டிருந்தனர். குழந்தைகள் மடிவதை கூட தடுக்க முடியாத அளவுக்கு வறுமை அவர்களை ஆட்டிப்படைத்தது. அந்த கடுமையான சூழலில் மார்க்ஸுக்கு அவரது நண்பர் ஏங்கல்ஸ் பக்க பலமாக இருந்து ஆறுதல் அளித்தார். வறுமையும் நோயும் விடாது துரத்திக்கொண்டிருந்த காலத்தில், மார்க்ஸ் தனது ஏழ்மை குறித்து சிந்தித்து அதற்கான தீர்வுகளைத் தேடவில்லை. மாறாக, உலகமெங்கும் ஒடுக்கப்பட்ட, வறுமையில் இருந்த பாட்டாளி வர்க்கம் குறித்து சிந்தித்தார்.
“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது” என்ற அவரது அறைகூவல், மனித வரலாற்றில் பல திருப்பங்களுக்குக் காரணமானது. மார்க்சின் புரட்சிகர கனவை ரஷ்யா, சீனா, வியட்நாம், கியூபா என பல்வேறு நாடுகளும் நனவாக்கின. அவரை பின்தொடர்ந்த சிந்தனையாளர்களும், புரட்சியாளர்களும் அதற்கு காரணகர்த்தாவாகினர். உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவும், அவர்கள் பக்கம் நிற்கவும், புரட்சி செய்யவும் மனிதர்கள் பலர் இருந்தாலும் அவர்களுக்கான கொள்கையாய் இருப்பது மார்க்ஸ் தான்.
இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னும் இன்றும் தொழிலாளர்களுக்கான, அறிவாயுதமாக விளங்கும் கார்ல் மார்க்ஸை அவரது நினைவு தினமான இன்று நினைவு கொள்வது ஒவ்வொரு தொழிலாளனின் கடமை.