மத்திய அரசின் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட கோரி நாடாளுமன்றத்தில்
பேசுவேன்’’ என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ் வைப்பகத்தில் நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும்
பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுத் தலைவர் கனிமொழி எம்பி தலைமையில் உறுப்பினர்களும், எம்பிகளுமான சின்ராஜ், நரேந்திரகுமார், தலாரி ரங்கையா, கீதாபென் வஜெசிங்பாய், முகமதுஅப்துல்லா, ராண்ணா கடாடி, அஜய் பிரதாப்சிங் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் பார்வையிட்டனர்.
அப்போது அவர்களுக்கு தொல்பொருட்கள், அகழாய்வு குறித்து தொல்லியல்துறையினர் விளக்கினர். பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடி அகழாய்வு செய்ததே நீண்ட போராட்டமாக இருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வை காட்சிப்படுத்தி, அதன் தொன்மையை, பெருமையை புரிந்து கொள்ளும் வகையில் அகழ் வைப்பகம் ஏற்படுத்தியதற்கு முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மாணவர்கள், இளைஞர்கள் புரிந்து கொள்ளும் வகையில் வெளிநாட்டு தரத்தோடு
உருவாக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னோடு வந்த எம்பிகளுக்கும் மறக்க
முடியாத அனுபவம் என்றனர். மத்திய அரசின் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் பேசுவேன்.
முதல்வரிடம் பேசி பெங்களூருவில் உள்ள தொல்பொருட்களை இங்கு ஒரே இடத்துக்கு
கொண்டு வரவும் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.







