விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக மன்சூர் அலிகானை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவின் 1990 காலகட்டத்தில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டியவர் மன்சூர் அலிகான். மிரட்டும் முகபாவனை, அசாத்தியமான வசன உச்சரிப்பு, வித்தியாசமான நடிப்பு போன்றவற்றால் தமிழ் சினிமாவில் டிமாண்டான வில்லனாக வலம் வந்தார். மிகப்பெரிய கதாநாயகர்களுடன் சினிமாவில் மல்லுக்கட்டிய மன்சூர் அலிகானுக்கு, கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூட நடிக்காதது மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது. இதை பல மேடைகளிலும் மன்சூர் அலிகான் சொல்லி இருக்கிறார்.
மன்சூர் அலிகானின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பல இடங்களில் மன்சூர் அலிகானைப் பற்றி பேசியுள்ளார். கைதி படத்தில் நடிகர் கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் மன்சூர் அலிகான் நடிக்க இருந்ததாக லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் கூறியிருந்தார். இதுமட்டுமன்றி மன்சூர் அலிகானை தனது படங்களில் ரசிகர்களுக்கு அவ்வப்போது நினைவு கூர்வார். அந்த வகையில் 1995-ல் அருண் பாண்டியன்,மன்சூர் அலிகான், மற்றும் நெப்போலியன் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் இடம் பெற்ற “சக்கு சக்கு வத்திகுச்சி” என்ற பாடலை விக்ரம் படத்தில் பயன்படுத்தி இருந்தார். அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றதோடு இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு ட்ரெண்டானது.
இந்நிலையில் ‘மன்சூர் அலிகானை ஒரு படத்திலாவது பயங்கரமான வில்லனாக நடிக்க வைத்து விடுவேன்’ என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்த பாகத்தையும் எடுக்க அவர் ஆர்வமாக உள்ளார். எனவே ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் கமல்ஹாசனுடன் மல்லுக்கட்டும் வில்லனாக மன்சூர் அலிகானை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் மன்சூர் அலிகானின் நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போகிறது.







