கலாஷேத்ரா விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
கலாஷேத்திரா பவுன்டேஷன் விவகாரம் குறித்து விசிக வின் எஸ்.எஸ். பாலாஜி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன், காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை மற்றும் பன்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை என்றும், இந்த விவகாரம் தமது கவனத்திற்கு வந்தவுடன், மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார்.
கடந்த 29-3-2023 அன்று மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரே வந்து கலாஷேத்திராவில் இருக்கக்கூடிய 210 மாணவிகளிடம் விசாரித்து விட்டுச் சென்றுள்ளார். அப்போது காவல் துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல் துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலையில், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்திரா பவுன்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்ததாகவும். இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்காக, வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளார்கள் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் இன்று காலையில், மீண்டும் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று, மாணவிகள் மற்றும் நிர்வாகத்தினருடன் பேசி வருகிறார்கள். அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
மேலும், மாணவிகளின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதனிடையே, தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கலாஷேத்திரா விவகாரம் தொடர்பான புகாரை விசாரணை செய்த தேசிய மகளிர் ஆணையம் தவறு ஏதும் நடக்கவில்லை என கூறிவிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக பின்புலமாக உள்ளதால், காவல்துறை முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.