நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுவந்த விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
சூர்யாவுடன் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமலிருந்து வந்த இவர் 8 ஆண்டுகளுக்குப் பின் ‘36 வயதினிலே’ திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.
ஜோதிகாவிற்கு அடுத்ததாக மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருக்கும் காதல்: தி கோர் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 68 -ல் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பர்சனல் தொடர்பான விஷயங்கள், லாங் ட்ரைவ் சென்றது, ஒர்க் அவுட் உள்ளிட்ட விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போதும் அவர் சில வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
அந்த வீடியோவில் தன்னுடைய கணவரான சூர்யா மற்றும் குழந்தைகளுடன் ஃபாரோ தீவுகளுக்கு சுற்றுலா செல்ல கிளம்பியது, அங்கு குடும்பத்தோடு லாங் ட்ரைவ் சென்றது, தங்கிய இடங்கள், கப்பல் பயணம், மலையேற்றம் உள்ளிட்ட பலவற்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







