ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு எடுத்து கூறுவது மிக முக்கியம் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், ஆறுமுகசாமி ஆணையம் உண்மை கண்டறியும் குழு தானே தவிர நிபுணர் குழு அல்ல என்றும், அதில் மருத்துவர்கள், நிபுணர்கள் இருக்க வேண்டியது கட்டாயம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், அப்போலோ ஒரு நல்ல மருத்துவமனை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனவும், ஆனால், ஆணைய விசாரணை ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறது என்பதை மருத்துவமனை தரப்பு கூறுவதை ஏற்க முடியாது எனவும் வாதிடப்பட்டது. ஆணையத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பதை சுட்டிக்காட்டினால் அதனை சரி செய்ய தயாராக இருப்பதாக கூறிய அரசு தரப்பு, ஆணையத்தை விரிவாக்க வேண்டும் என நீதிமன்றம் சொன்னால் அதனை செய்வதற்கும் தயாராக உள்ளோம் என தெரிவித்தது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு எடுத்து கூறுவது மிக மிக முக்கியம் என அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டதா என்பதை முதலில் அப்போலோ தரப்பு நிரூபிக்கட்டும் என வாதிட்ட அரசு தரப்பு, அதன் பின்னர் ஆணையத்துக்கு வேறு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக முடிவெடுக்கலாம் என வாதிட்டது. ஆணையத்துக்கு இல்லாத அதிகாரத்தை எல்லாம் செய்ய சொல்லி கேட்கும் அப்போலோவின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.
இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதன் மீது விவாதம் நடக்குமா என கேள்வி எழுப்பினர். நிச்சயம் விவாதம் நடக்கும் எனக்கூறிய தமிழ்நாடு அரசு, அந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அரசும் கூட கேள்விகளை கேட்கும் என குறிப்பிட்டது. குறிப்பாக கிரிமினல் நடவடிக்கையா? சிவில் நடவடிக்கையா? அல்லது ஆணையத்தின் முடிவுகளை நிராகரிப்பதா? என்பது அப்போதுதான் முடிவு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.