சுவை கண்டறியும் மின்னணு சாப்ஸ்டிக்ஸை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளனர் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள்.
புதிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் ஜப்பான் கைதேர்ந்த நாடு என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அங்கு சிறிய மின்னணு பொருட்கள் முதல் பெரிய பொம்மைகள் வரை பல தயாரிப்புகள் குடிசைத் தொழிலாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி, நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வரும் ஜப்பானின் புதிய கண்டுபிடிப்புதான் இந்த மின்னணு சாப்ஸ்டிக்ஸ்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இயல்பாகவே, ஜப்பான், சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் கைகளால் உணவு உட்கொள்ளாமல் சாப்ஸ்டிக்ஸ் கொண்டுதான் உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளனர். அப்படி, அவர்கள் சாப்ஸ்டிக்ஸ் குச்சிகளை கொண்டு உணவு உட்கொள்ளும்போது, நன்றாக மென்று ஜீரண சக்தி ஏற்படுவதற்கு ஏதுவாக உள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர்களால் உணவின் சுவையை சரியாக கண்டறிய முடிவதில்லை என்ற குறை இருந்து வந்தது. மேலும், சர்க்கரை நோயாளிகளால் உப்பின் அளவை சரியாக கண்டறிய முடியாமல் தவித்து வந்துள்ளனர்.
அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மின்னணு சாப்ஸ்டிக்ஸை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் மெய்ஜி பல்கலைக்கழக பேராசிரியர் ஹோமி மியாஷிதா மற்றும் பானங்கள் தயாரிப்பாளர் கிரின் ஹோல்டிங்ஸ் கோ.
அண்மைச் செய்தி: இந்தியா வந்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
இந்த மின்னணு சாப்ஸ்டிக்ஸ், குறிப்பாக சோடியமை உணவில் குறைக்க விரும்புபவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது என குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள், சிறிய அளவிலான கடிகாரம் போன்ற அமைப்பை உடைய இந்த கருவி சாப்ஸ்டிக்ஸ் குச்சிகளுடன் இணைத்து பயன்படுத்தும்போது உணவின் சுவையை கண்டறியவும், உணவில் உப்பின் அளவை தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளவும் உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
மேலும், ஜப்பான் மக்கள் ஒரு நாளைக்கு, சுமார் 10 கிராம் உப்பை உட்கொள்வதாகவும், இது உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமானதாக இருப்பதால் கருவியை உருவாக்க வேண்டிய தேவை இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
சோடியமை அதிக அளவில் எடுத்துக்கொள்வதால், ரத்த அழுத்தம் அதிகரிப்பதாகவும், மாரடைப்பு ஏற்படுவதாகவும் ஆய்வுகள் தொடர்ந்து தெரிவிப்பதன் அடிப்படையில், அதனை குறைக்கவே மின்னணு சாப்ஸ்டிக்ஸ் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும், இந்த மின்னணு சாப்ஸ்டிக்ஸை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் இதனை பயன்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.