அரசின் திட்டங்களை உரிய காலத்திற்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ என்ற பெயரில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் நேரு, பெரியசாமி, கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின் என 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்ட நிலையில், திட்டங்களின் நிலைப்பாடு, தாமத்திற்கான காரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், களஆய்விற்கு செல்லும் போது சில இடங்களில் பணிகள் முழுமையாக முடியாத நிலை இருப்பதை சுட்டிக்காட்டி,
பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.
ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால், அது எவ்வளவு வேகமாக செயல்பாட்டிற்கு வருகிறது என்பதுதான் முக்கியம் என்று கூறிய முதலமைச்சர்,
அறிவிக்கப்பட்ட திட்டம் தாமதமானால் அதற்கான மதிப்பீடுகள் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.
அரசு அறிவித்த திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வந்தால் அதுதான் நாம் நிர்வாக ரீதியாக நடத்தி காட்டும் சாதனை என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்,
திட்டங்களை முழு மூச்சுடன் நிறைவேற்றி, அதை மக்களுக்கு கொண்டு சேர்த்திட அரசு அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.







