உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதில் பங்கேற்கவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை மாற்றியமைக்கப்பட்டு ஐசிசி வெளியிட்டது. உலகக் கோப்பை தொடருக்கு சுமார் 40 நாட்கள் இருக்கும் நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. தொடக்க போட்டியில் அக்டோபர் 5-ம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.
இதனிடையே ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, இம்மாதம் 30-ம் தேதி முதல் செப்டம்பா் 17-ம் தேதி வரை பாகிஸ்தான், இலங்கையில் நடைபெறவுள்ளது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டிகளில் இந்திய அணி சார்பில் ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், இஷான் கிஷண், சூா்யகுமாா் யாதவ், திலக் வா்மா, கே.எல்.ராகுல், ஹா்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷா்துல் தாக்குா், அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படுமென ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்த உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி செப்டம்பர் 3-ம் தேதி அறிவிக்கப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பையில் இந்திய அணி செப்டம்பர் 2-ம் தேதி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.