டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. முதல் போட்டியும் இந்தியாவும் கடைசியாக 2016-ம் ஆண்டில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் கோப்பையை வென்றிருந்தது.
இந்நிலையில் 7வது டி-20 உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா காரணமாக இந்த போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றி அறிவிக்கப்பட்டது. அதன்படி, உலக கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில், தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று முதல் நடக்கின்றன. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா அணிகளும் ‘பி’ பிரிவில் பங்களாதேஷ், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
சூப்பர் 12 சுற்றில், குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரு முதல் சுற்று அணிகள் இடம்பெறுகின்றன. குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு நுழையும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 24-ஆம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது. உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ. 6 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது.
முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. மாலை 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஓமன்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் மற்றொரு போட்டியில் மகமுத்துல்லா தலைமையிலான பங்களாதேஷ் அணி, ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது.








