“விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு நான்தான் பொறுப்பு” என நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் லியோ. லலித் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளனர்.
லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகும் நிலையில், நேற்று முன் தினம் டிரெய்லர் வெளியானது. டிரெய்லரில் நடிகர் விஜய் கதாபாத்திரம் தகாத வார்த்தை ஒன்றைப் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. பெண்களை இழிவுப்படுத்தும் இந்த வார்த்தையை விஜய் பேசியிருக்கக் கூடாது என்றும் பல குழந்தைகளை ரசிகர்களாக வைத்திருப்பவரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்றும் ரசிகர்கள் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் லியோ பட நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் இந்த் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதில், “திரையரங்குகளில் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டுதான் வெளியாகும். முதலில் இந்த வார்த்தையை பேச வேண்டுமா என விஜய் சந்தேகமுடனே கேட்டார். நான்தான் கதைக்கு தேவையென வற்புறுத்தலாக கூறி படமாக்கினேன்.
யூடியூபில் தணிக்கைக் கிடையாது. திரையரங்குகளில் வெளியாகப் போவதில்லை. அது யார் மனதையும் புண்படுத்த எடுக்கவில்லை. கதைக்கு முக்கியமாக தேவைப்பட்டது. படம் பார்க்கும்போது புரியும். இந்த சர்ச்சைக்கு முற்றிலும் நான் பொறுப்பேற்கிறேன். இது நடிகர் விஜய் பேசிய வார்த்தை கிடையாது. லியோவில் பார்த்திபன் எனும் அந்தக் கதாபாத்திரம் பேசுவது அவ்வளவே” எனக் கூறினார்.