1901ஆம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரி மாதமானது அதிக வெப்பமான மாதமாக இருந்ததாகவும், இது தொடர்ந்தால் உணவு உற்பத்தித் துறை பாதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
1901ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் மிக அதிக வெப்பமான மாதமாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் 29.5 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை இருந்துள்ளது. இது 120 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை ஆகும். இந்நிலையில், வரும் மார்ச் முதல் மே மாதங்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உணவு உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோதுமை, பருப்பு, மாம்பழம், கடுகு உள்ளிட்ட விளைபொருள்களின் விளைச்சலை இந்த அதிவெப்பம் கண்டிப்பாக பாதிக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதே வெப்பநிலை தொடரும்பட்சத்தில், நாட்டின் உணவு உற்பத்தித் துறை கட்டாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
-ம.பவித்ரா








