பெங்களூருவில் இதய தினத்தை முன்னிட்டு டிராஃபிக் சிக்னல்களில் இதய வடிவிலான விளக்குகள் ஒளிர செய்யப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள சில டிராஃபிக் சிக்னல் விளக்குகள் இதய வடிவில் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பால் மருத்துவமனை மற்றும் பெங்களூரு போக்குவரத்து போலீஸ் மற்றும் ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) ஆகியோர் இணைந்து இதய பிரச்னை தொடர்பாக அவசர காலங்களில் முதலுதவி அல்லது மருத்துவ உதவியை விரைவாக பெறுவதற்காக போக்குவரத்து சிக்னலில் இதய வடிவிலான அமைப்பை ஒளிர செய்துள்ளனர்.
இவை பெங்களூருவில் 15ம் மேற்பட்ட இடங்களில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் மாற்றங்கள் செய்து அவற்றை இதய வடிவ சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளது. இது உலக இதய தினத்தை நினைவுகூரும் முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
https://twitter.com/ManipalHealth/status/1577905285670526976
இதுகுறித்து மணிப்பால் மருத்துவமனை தனது டிவிட்டர் பக்கத்தில், “#WorldHeartDay தினத்தில், பெங்களூரை ‘இதய ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றுவதற்கு புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சிவப்பு சிக்னல் இதயத்தின் வடிவத்தில் இருப்பது, இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்பும் ஆடியோ செய்திகள் மற்றும் அவசர சேவைகளை எளிதாக அணுகுவதற்கான QR குறியீடுகள் ஆகியவை அடங்கும் என்று பதிவிட்டுள்ளது. மேலும் அதுகுறித்த சில புகைப்படங்களையும் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மேலும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதய வடிவிலான போக்குவரத்து விளக்குகளைத் தவிர, மணிப்பால் மருத்துவமனைகள் போக்குவரத்து சிக்னல்களுக்கு அருகில் QR குறியீடுகளை அமைத்துள்ளன. இது ஸ்கேன் செய்யும் போது நோயாளியை அவசர எண்ணுடன் இணைக்கும் மற்றும் ஒரே கிளிக்கில் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு திருப்பி விடப்படும்.
மருத்துவ உதவிக்காக பல இடங்களில் அழைக்கவும், சரிபார்க்கவும் முடியாத நிலையில் அவசர காலங்களில் ஒரு பொத்தானை அழுத்தினால் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.




