குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறுவதற்கே வாய்ப்பு அதிகம் இருப்பதாக படேல் சமூக இளம் தலைவர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை எங்குமே பார்க்க முடியவில்லை என கூறினார். பாஜகவில் இணைவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ஏன் கூடாது என்றும் அவர் பதிலளித்துள்ளார்.
குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைவிட ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் உத்தி நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவர் பரத்சிங் சோலங்கி, ராமர் கோயில் கட்டுவதற்காக 1980களில் குஜராத் மக்கள் ஏராளமான உதவிகளை செய்ததாகவும், ஆனால் ராமர் ஆலயம் அமைக்க பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ராமர் சிலை மீது நாய்கள் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டது என்றும் கூறி இருந்தார்.
இதை சுட்டிக்காட்டி பேசிய ஹர்திக் படேல், காங்கிரஸ் கட்சி ஹிந்துக்களின் உணர்வுகளோடு தொடர்ந்து விளையாடுவதாகவும், தேவையின்றி கடவுள் ராமரை இழிவுபடுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். ஹிந்துக்களை ஏன் இவ்வளவு வெறுக்க வேண்டும்? ராமரை ஏன் இவ்வளவு இழிவுபடுத்த வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சியின் இத்தகைய போக்கை தான் அக்கட்சியில் இருந்தபோதும் கண்டித்ததாக ஹர்திக் படேல் தெரிவித்தார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.