நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை, 3 நாட்களுக்குள் கேரள அரசே பொறுப்பேற்று அகற்ற தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கேரளாவின் மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும் அல்லது கழிவு மேலாண்மை நிறுவனத்திடம் தர வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. அப்போது, கேரள மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அதனை அகற்றுவதற்கான செலவை கேரள அரசு ஏற்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், கேரள மாசு கட்டுப்பாட்டு வாரிய உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.







