தங்கப் பதக்கம்…750 கிலோ லட்டுகள்… #VineshPhogat -த்திற்கு கிராமத்தினர் உற்சாக வரவேற்பு!

தாயகம் திரும்பிய வினேஷ் போகத்திற்கு தங்கப் பதக்கம் வழங்கி 750 கிலோ லட்டுகள் தயாரித்து அவரது சொந்த கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் நடந்த…

தாயகம் திரும்பிய வினேஷ் போகத்திற்கு தங்கப் பதக்கம் வழங்கி 750 கிலோ லட்டுகள் தயாரித்து அவரது சொந்த கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரிப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் நேற்றைய தினம் நாடு திரும்பினார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி  கிராமத்துக்கு வினேஷ் போகத் சென்றடைந்துள்ளார். அங்கு ஊர் மக்கள் திரண்டு வினேஷ் போகத்தின் வருகையை திருவிழாவாக கொண்டாடினர். மாலை மரியாதைகள், பரிசுப் பொருட்கள் என வழங்கிய ஊர் மக்கள் வினேஷ் போகத்தை கௌரவித்தனர்.வினேஷின் வருகையை கொண்டாட 750 கிலோ லட்டுகளும் தயாரித்து வழங்கினர்.

மேலும் வினேஷ் போகத்தை கௌரவிக்கும் விதமாக ஊர் மக்கள் ஒன்றிணைத்து அவருக்கு தங்கப் பதக்கத்தையும் வழங்கினர். இதனையடுத்து தனது உறவினரும் குருவுமாக மகாவீர் சிங்கிடம் ஆசி பெற்ற வினேஷ் போகத் கண்ணீர் விட்டு அழுதார்.

இதையடுத்து, வினேஷ் போகத் பேசியதாவது :

“ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியாதது எனது வாழ்க்கையில் ஆறாத வடுவாக இருக்கும். இனியும் நான் மல்யுத்தத்தில் ஈடுபடுவேனா மாட்டேனா என்று தெரியவில்லை. எனக்கு இங்கு வந்தவுடன் கிடைத்த அன்பு எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது”

இவ்வாறு அவர் தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.