மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியை 90 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டதை கண்டித்தும் உணவு மற்றும் ஊட்டச்சத்திற்கான நிதியை குறைத்ததை கண்டித்தும் திருநெல்வேலியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 1-ம் தேதி மத்திய அரசினுடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த ஆண்டு 240 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 90 கோடி ரூபாயாக நிதி குறைக்கப்பட்டு 150 கோடி ரூபாயாக மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச உதவித்தொகை வெகுவாக குறையும் என்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் வெகுவாக முடக்கப்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோன்று உணவு மற்றும் ஊட்டச்சத்திற்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதன் மூலமாக கர்ப்பிணி தாய்மார்கள் பிறக்கும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைந்து மாற்றுத்திறனாளிகளாக மாறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக மத்திய அரசு மாற்றுத்திறனாளிகள் திட்டத்திற்கான நிதியை கூடுதலாக ஒதுக்குவதுடன் உணவு ஊட்டச்சத்திற்கான நிதியையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கூறி கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.