ஆப்பிள் நிறுவனத்துக்குத் தேவையான ஐபோன் மொபைல் போன்களை உற்பத்தி செய்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் , இந்தியாவில் AirPods தயாரிப்பதற்கான புதிய ஆர்டரை வென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஒப்பந்த எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளரான தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவில் ஆப்பிளின் ஏர்போட்களை உருவாக்குவதற்கான ஆர்டரை வென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வயர்லெஸ் இயர்போன்களை உற்பத்தி செய்வதற்காக ஆந்திராவில் சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு புதிய தொழிற்சாலையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆப்பிள் ஐபோன் புகழ் பிராண்ட் விரைவில் இந்தியாவில் அதன் உற்பத்தியை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பல சீன சப்ளையர்கள் தற்போது ஏர்போட்களை தயாரித்து வரும் நிலையில், ஒப்பீட்டளவில் குறைந்த லாப வரம்புகள் காரணமாக, ஏர்போட்களை இணைக்கலாமா என்பது குறித்து ஃபாக்ஸ்கான் அதிகாரிகள் பல மாதங்களாக விவாதித்து வந்த நிலையில், இறுதியாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் உடனான தனது உறவை வலுப்படுத்தவும், ஆப்பிளின் புதிய தயாரிப்புகளுக்கான ஆர்டர்களைப் பெறவும் ஒப்பந்தத்தைத் தொடர முடிவு செய்தது. மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் இந்தியாவில் உற்பத்தியை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டர்கனெக்ட் டெக்னாலஜி லிமிடெட், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடு செய்து தெலுங்கானாவில் ஒரு உற்பத்தி ஆலையை கட்ட உள்ளதாகவும் , 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உற்பத்தியைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரிய கொரோனா அலையால், ஃபாக்ஸ்கானின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை பாதிப்புக்குள்ளானதால், சீனாவிலிருந்து அதன் உற்பத்தியை மாற்றியமைத்தது. இருப்பினும் அதன் உற்பத்தியை மாற்றியமைத்தாலும், ஃபாக்ஸ்கானின் உற்பத்தித் திட்டம் தற்போதைய ஏர்போட் சப்ளையர்களை பாதிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஆப்பிள் நிறுவனம் சில கார்ப்பரேட் பிரிவுகளுக்கான போனஸை தாமதப்படுத்துவதாகவும், அதன் செலவுக் குறைப்பு முயற்சிகளை தீவிரப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்நடவடிக்கையானது நிறுவனத்தின் சில பணியாளர்களுக்கு போனஸின் அதிர்வெண்ணைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது, ஆப்பிளின் ஏர்போட்கள் பல சீன சப்ளையர்களால் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஃபாக்ஸ்கான் இந்தியாவிற்கான ஆர்டரை வென்றுள்ளதன் மூலம், இந்தியா உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும் பல சாதகமான விஷயங்களைக் வழங்கும் என்று கூறப்படுகிறது.மேலும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய சீனாவிற்கு வெளியே முதலீட்டை அதிகரிப்பதாகவும், உற்பத்திக்காக சீனாவை நம்பியிருப்பதை குறைக்கும் என்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா