அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புற்றுநோய் கிளீசன் ஸ்கோர் 9 (கிரேடு குழு 5) என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பைடன் சிறுநீர் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து வெள்ளிக்கிழமை அன்று பரிசோதனையில் இவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. “தீவிரமான வகைப் புற்றுநோயாக இருந்தாலும் அதை குணப்படுத்த முடியும்” என பைடனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பைடனின் புற்றுநோய் பற்றிய செய்தி பரவிய உடனேயே, அவரது முக்கிய அரசியல் போட்டியாளரான, பைடனை அடிக்கடி கேலி செய்யும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஜோ பைடனின் சமீபத்திய மருத்துவ நோயறிதலைப் பற்றி அறிந்து நான் வருத்தம் அடைந்தேன். அவர் விரைவாகவும், வெற்றிகரமாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.