தமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பூர் மாநகராட்சியில் ஒரு குரல் புரட்சி
என்னும் டிஜிட்டல் குறைதீர் சேவை துவங்கப்பட்டுள்ளது. இலவச தொலைபேசி எண்
மூலமாகவே பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்
என திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்தார்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஒரு குரல் புரட்சி திட்டம் என்ற புதிய
டிஜிட்டல் குறை தீர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி
மேயராக தினேஷ் குமார் பொறுப்பேற்ற பின்னர் 100 நாட்களில் மேற்கொண்ட பணிகள்
குறித்தும் இனி மேற்கொள்ளக்கூடிய பணிகள் குறித்தும் ஒரு அறிக்கை
வெளியிட்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் எளிதாக மாநகராட்சி நிர்வாகத்தில் தங்கள் குறைகளை, புகார்களை தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் சேவை தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி கடந்த 13 ஆம் தேதி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் திறன்மிகு திருப்பூர் – ஒரு குரல் புரட்சி – சொல்லுங்கள் செய்யப்படும் என்ற திட்டம் துவங்கப்பட்டது.
இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டணமில்லா
இலவச தொலைபேசி எண் 155304 என்ற எண்ணும், அதே போல் வாட்ஸ் அப் மூலமாக புகார்
தெரிவிக்க 7305712225 என்ற எண்ணும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி எண்கள் மூலம் ஒரே நேரத்தில் திருப்பூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்த 15 பேர் வரை தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 24 மணி நேரமும் புகார்கள் தெரிவிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.
குப்பைகள் சார்ந்த சுகாதாரத் துறை குறைகள், மருத்துவம் சார்ந்த சுகாதாரத் துறை
குறைகள் , சாலைகள் பழுதடைந்தது மின் விளக்குகள் எரியாமல் இருப்பது போன்ற 11
துறைகளுக்கான புகார்களை , கோரிக்கைகளை மேற்கண்ட எண்களில் பொதுமக்கள்
தெரிவிக்கலாம்.
அவ்வாறு தெரியப்படுத்தினால் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கும் , சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அதற்கான குறுஞ்செய்தி குறை கூறிய நபருக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நேரடியாக அந்த புகார் மாநகராட்சி மேயருக்குக்கு, ஆணையருக்கும் சென்றடையும்.
மேலும் இந்த மையத்தில் உள்ள கணினிகளின் மூலம் குப்பை வாகனங்களை கண்காணிப்பது, வாகன போக்குவரத்து நெரிசல்களை கண்காணிப்பது போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தெருவிளக்குகளின் எண்ணிக்கை மற்றும் அது குறித்த விவரங்களும் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும் எனவும் மாநகராட்சி முழுவதும் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இந்த சேவை மையத்தில் இணைக்கப்பட்டிருப்பதோடு அவைகளின் தொடர்பு காவல் நிலையங்களுக்கும் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் நியூஸ்7 தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக முதல்வர் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை புதிதாக
அறிமுகப்படுத்தப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் அவரது வழியில் திருப்பூர்
மாநகராட்சியில் ஒரு குரல் புரட்சித் திட்டம் முதன்முறையாக
துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் எளிதாக தங்கள் குறைகளை
மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவர முடியும்.
அதுமட்டுமல்லாது அவை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கான வழிகளும் ஏற்பாடு
செய்யப்பட்டு இருக்கிறது. பொது மக்களின் சேவைகள் மட்டுமல்லாது
அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு அம்சங்கள் இதில்
அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார் தினேஷ் குமார்.
ஒரு குரல் புரட்சி என்னும் டிஜிட்டல் முறையில் குறைதீர் சேவை மையம்
மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிக வேலைப்பளுவை ஏற்படுத்தினாலும் கூட
பொதுமக்களுக்கு எளிதாக அவர்கள் குறைகளை மாநகராட்சி நிர்வாகத்திடம்
தெரியப்படுத்தி அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஓர் எளிய வழி ஒரு குரல் புரட்சி
என்பதில் மாற்று கருத்து இல்லை.