தென்காசி மாவட்டம், தமிழக – கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவியில், திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக, பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டம், ஆரியங்காவு பகுதியில் உள்ள பாலருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளை அப்புறப்படுத்திய வனத்துறையினர் பாலருவியில் குளிக்கத் தற்காலிகமாகத் தடை விதித்தனர்.
இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் நீராட, சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தொடர்ச்சியாகப் பெய்து வரும் சாரல் மற்றும் கனமழையிலும் அருவியில் அவர்கள் ஆனந்தமாக நீராடினர். தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலாவாசிகள் வருகையால், இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.







