எம்ஜிஆருடன் அறிமுகமான அந்த நடிகர், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால், கோயிலில் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் திரும்பி வந்து, திரையுலகில் நிலையான இடத்தை பிடித்தார். யார் அந்த நடிகர்?
காரைக்கால் அருணாச்சலம் தங்கவேலு என்கிற கே.ஏ.தங்கவேலு. எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி திரைப்படத்தில் அறிமுகமானவர், ஆறுவயதில் தங்கவேலுவின் தாய் மரணமடைய, தந்தை மறுமணம் புரிந்தார். ஆனால் வழக்கம்போல் சித்தி கொடுமை தாங்க இயலாமல், நாடக குழுவில் இணைந்தார். நாடக குழுவின் தலைவர், சென்னைக்கு இடம்பெயர, தங்கவேலுவும் சென்னைக்கு வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், தங்கவேலுவுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியது. சென்னையில் பசியோடு தவித்த நிலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள முருகன் கோயிலில் தங்கி யாசகம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டார்..கோயிலில் அவரது நிலையை கண்ட மாரப்பா என்ற நடிகர் மீண்டும் தங்கவேலுவை சென்னைக்கு அழைத்து வந்தார். 17 ஆண்டுகளுக்கு பிறகு, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் மணமகள் திரைப்படத்தில் மீண்டும் நடித்தார் தங்கவேலு.
கலைவாணரால் நகைச்சுவை நடிப்பில் உச்சம் தொட்ட தங்கவேலு, தனக்கு வாய்ப்பு தந்த கலைவாணரின் படத்தை தான் அணிந்திருந்த தங்கச்சங்கிலியில் இணைத்து வாழ்நாள் வரை வணங்கி வந்தார். சிங்காரி என்ற திரைப்படத்தில் நடித்தபோது அடிக்கடி டணால் என்ற வார்த்தையை பயன்படுத்த, அன்று முதல் ‘டணால்’ தங்கவேலு என அழைக்கப்பட்டார். கல்யாண பரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற மன்னாரன் கம்பெனி நகைச்சுவை இன்றும் சிரிக்க வைக்கிறது.
நவராத்திரி திருவிழாவின்போது ஒரு நாடகத்தில் பெண் வேடத்தில் நடித்தவரை தங்கவேலு பாராட்ட, பெண்ணாக நடித்தவர் நாகேஷ் என்பதை அறிந்து வியப்படைந்தார்.
நடிக்க வாய்ப்பில்லாமல் கோயிலில் யாசகம் பெற்று வாழ்ந்து, பின்னர் திரும்பி வந்து 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மறைந்த தங்கவேலுவின் வாழ்க்கை, முயற்சி தன்மெய் வருத்த கூலிதரும் என்பதைத் தானே காட்டுகிறது.