திமுக ஆட்சியில் ஆளுநர் முதல் காவலர் வரை பாதுகாப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை வேப்பேரியில் மாநகர காவல் ஆணையரக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், கட்டப் பஞ்சாயத்து அராஜகம், அட்டூழியம் சர்வ சாதாரணமாக திமுக ஆட்சியில் நடக்கிறது எனவும், ஆட்சிக்கு எதிராக கருத்து சொல்லும் சுதந்திரம் கிடையாது என்றும், திமுக ஆட்சியில் ஆளுநர் முதல் காவலர் வரை பாதுகாப்பு இல்லை, காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டினார். 

தமிழ்நாட்டில் தனிமனித உரிமை, தனிமனிதர் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்று விமர்சித்த ஜெயக்குமார், “சட்டம் – ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினருக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை, அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. திமுக ஆட்சியில் அமளிப் பூங்காவாக இருக்கிறது. சட்டம் 356ஐ நோக்கி திமுக அரசு சென்று கொண்டிருக்கிறது. லாக் அப் மரணங்கள் மூடி மறைக்கப்படுகிறது” என்றார்.
மேலும், விசாரணை கைதி உயிரிழப்பு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், செயற்கை மின் வெட்டை ஏற்படுத்தி தமிழ்நாடு அரசு மத்திய அரசின் மேல் பலி போடுகிறது என்றும் கூறினார்.






