கட்டுமானப் பணி நிறைவு சான்றிதழ் இல்லாமலேயே மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை வழங்கலாம் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் கட்டுமானப்பணிகள் முடிந்த பிறகு தான் மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு ஆகிய வசதி பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது இதற்கு தீர்வளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த மற்றும் கட்டட விதிகள் 2019, விதி எண் 20-ன் படி கட்டடங்களுக்கு கட்டுமான நிறைவு சான்று இன்றி மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வசதி உள்ளிட்டவற்றை வழங்கலாம் என அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தனை தொடர்ந்து மின்சார வாரியமும் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கட்டட சான்று பெற்ற பிறகே, மின் இணைப்பு , குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு ஆகியவற்றை வழங்குவதால், கட்டடம் கட்டும் பணியாளர்களும், உரிமையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக எழுந்த தொடர் புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது. இந்த புதிய நடவடிக்கையால், இனி எந்த வித சிரமமும் இன்றி கட்டட முடிவு சான்றிதழ் பெறுவதற்கு முன்பாகவே மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வசதி ஆகியவற்றை பெறலாம்.
மேலும் இதனுடன் சில கட்டுப்பாடுகளையும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 12 மீட்டர் உயரம் வரை உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் (8,070 சதுர அடி) பரப்பளவிற்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும், இது போன்று அனைத்து தொழிற்சாலைகளுக்கும் இந்த வசதியை வழங்கலாம் எனவும், இதற்கான உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா