மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பிலான 25 மின் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனப்புகையே காற்று மாசடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்காற்று மாசினை குறைக்கும் முயற்சியாகவும், புவி வெப்பமயமாதலை தடுக்க ஏதுவாகவும், கரியமில வாயு வெளியேற்றத்தினை குறைப்பதற்காகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் மாசு கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு மின் வாகனங்கள் வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பிலான 25 மின் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், உலக சுற்றுச்சூழல் தினம் நாளை கொண்டாடுவதையொட்டி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மதுரை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு பசுமை விருதையும், மற்றும் ஐந்து தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகையும், பசுமை முதன்மையாளர் விருதுகளையும் முதல் அமைச்சர் வழங்கினார்.