சர்வதேச அளவில் நெகிழி குப்பைகளுடன், மின்னணு குப்பபைகளும் மனித குலத்திற்கு பெரும் சவாலாக மாறிவரக்கூடிய நிலையில், தற்போது மின்னணு கழிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கார் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஹரிபாபு நடேசன் எனும் இளைஞர் ஒருவர் 2,805 உலோகத் துண்டுகள், 800 ஸ்பார்க் பிளக்ஸ், 200 பாட்டில் மூடிகள், மற்றும் 60 மதர் போர்டுகள், தட்டச்சு இயந்திரங்கள், பேனாக்கள் எனப் பல உதிரி பொருட்களைக் கொண்டு போக்ஸ்வேகன் காரினை உருவாக்கியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உலக அளவில் மின்னணு கழிவுகளை அதிக அளவு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியில் இந்தியா முதல் ஐந்து இடங்களில் உள்ளது. சராசரியாக ஆண்டுக்கு இரண்டு மில்லியன் டன் மின்னணு கழிவுகளை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த சூழலில் ஹரிபாபு உருவாக்கியுள்ள கார் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. முன்னதாக இவர் பல கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளார். அதில் மேக் இன் இந்தியா திட்டத்தின் லோகோவான சிங்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதனைத் தொடர்ந்து பல கலைப்பொருட்களையும் அவர் வடிவமைத்திருந்திருக்கிறார்.
கேரளாவை பூர்விகமாக கொண்ட ஹரி, 1999-ல் சென்னையில் தனது இளங்கலை படிப்பினை முடித்த பின்னர், அகமதாபாத்திலுள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்று மும்பையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வேலையில் ஏற்பட்ட சலிப்பு, இயந்திர கழிவுகளிலிருந்து புதிய கலை வடிவங்களை உருவாக்குவதன் பக்கம் திருப்பியுள்ளது.
அதனைத் தொடர்ந்து 2009-ல் தனது வேலையை கைவிட்டு முழுநேரமாக கலைப்பொருட்களை வடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபடத்தொங்கிவிட்டார் ஹரி. இவ்வாறான மாற்று முயற்சியில் ஈடுபடுவதற்கான ஆதரவுகள் எந்த தளத்திலும் தனக்கு கிடைக்கவில்லை என்றும், அதே போல, தனது குடும்பம் தன்னுடைய வேலை குறித்து அதிக கவலை தெரிவித்ததாகவும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.
தான் பெரிதும் முயன்று உருவாக்கிய கலைப்பொருட்களை பணம் கொடுத்து வாங்குவதற்கு ஆட்கள் யாரும் இல்லாது பெரும் வருத்தமளிப்பதாகவும், இதனால் தன்னுடைய வங்கிக் கணக்கில் குறைந்தபட்சத்திற்கும் குறைவாகவே பணம் இருப்பு உள்ளதாகவும் ஹரி தெரிவித்துள்ளார்.
இப்படியான சூழலில் பஜாஜ் நிறுவனத்தின் கலை கேலரி இவருக்கு கூட்டுறவு விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இவருடைய கலைப்படைப்புகள் டெல்லி விமான நிலைய T3 முனையத்திலும், ஆண்டு தோறும் நடைபெறும் மும்பை கால கோதா கலைப்பொருட்கள் திருவிழாவிலும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஹரியின் கலைப்படைப்புகள் வெறுமென இயந்திரங்களின் ஒன்றினைந்த வேலைப்பாடுகள் கிடையாது. அதனையும் கடந்து அவர் மின்னணு கழிவு குறித்த விழிப்புணர்வை இதன் மூலம் ஏற்படுத்த முயல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.