இலங்கையில் மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளிகளின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது.
இலங்கையில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை நாளுக்கு நாள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளதால், நோயாளிகள் மரணத்தின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளனர். 80 சதவீத மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்துவந்த இலங்கை, தற்போது இறக்குமதி செய்வதற்கு அந்நிய செலாவணி இன்றி தவித்து வருகிறது. இதனால், மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகளில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அபெக்ஷாவில், மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் இல்லாததால் நோயாளிகளுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளவும், அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவும் முடியாத நிலை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உதவி தேவைப்படுவோருக்கு உதவ முடியாத கையறு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயாளிகள், நீரழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் என பலருக்கும் உரிய நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்க முடியாததால், அவர்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகக் கூறும் மருத்துவர்கள், அவர்களின் உறவினர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தாங்கள் தவித்து வருவதாகக் கூறுகின்றனர்.
தற்போதைய சூழல் காரணமாக மருத்துவப் பணியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல் அதிகரித்துள்ளதால், அரசு கூடுதல் பாதுகாப்பு அளிக்கக் கோரி அவர்கள் போராடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தியா அனுப்பியுள்ள 200 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் நேற்று கொழும்பு சென்றடைந்த நிலையில், அதில் 25 டன் அளவுக்கு மருந்துப் பொருட்கள் இருப்பதால் மருத்துவப் பணியாளர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சமூகம் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள இலங்கை அரசு மருத்துவப் பணியாளர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வாசன் ரத்னசிங்கம், இல்லாவிட்டால் தாங்கள் கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என வேதனை தெரிவித்துள்ளார்.