கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் மீது திமுகவில் கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலில் திமுகவின் அறிவுப்புக்கு எதிராக செயல்பட்ட விவகாரத்தில் கடலூர் எம்எல்ஏ கோ.அய்யப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அய்யப்பன் மீது திமுகவில் கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் அவர்கள் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கழகப் பணியாற்ற அனுமதிக்குமாறு கழகத் தலைவர் அவர்களிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் கழக உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், பாஜகவில் அவரை இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா