திருப்பதி கோயில் பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளதால், பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்கும் வரிசை, 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டு கொண்டே செல்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதிகளவில் பக்தர்கள் வருவதால் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் கட்டுக்கடங்காத கூட்டம் திருப்பதியில் குவிந்துள்ள நிலையில், தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இலவச தரிசனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்தர்களுக்கு திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரிடையாக வழங்கப்பட்டு வந்தது. பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் நேரடி இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டது. தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பக்தர்கள் காத்திருக்கும் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
தற்போது ரூ.300 கட்டண சிறப்பு தரிசனத்தில் தினமும் 25 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் என 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை,ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசனத்திற்கான 15 லட்சம் டிக்கெட்டுகள் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஜூன் 21ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு , ஆன்லைனில் வெளியிடப்பட்டது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 61 நாட்களுக்கு 15.25 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 1மணிநேரத்தில் 15 லட்சம் டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். பாத யாத்திரை வரும் பக்தர்கள்அதிக அளவில் வருவதால், பக்தர்களை தங்கும் வைகுண்டம் காம்ப்ளக்சில் 33 குடோன்களிலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதனால் சுமார் 24 மணி நேரம் காத்திருந்தும், 4 கிலோமீட்டர் நீண்ட வரிசையிலும் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். பலமணி நேரம் காத்திருந்தாலும் ஏழுமலையானை தரிசிக்கும் நொடியில் களைப்பு பறந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருப்பதியில் நேற்று 73,358 பேர் தரிசனம் செய்தனர். 41,900 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.11 கோடி கோயில் உண்டியலில் காணிக்கையாக வசூலாகியுள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.