வீடுகளில் டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையைச் சேர்ந்த ராதா என்ற ஆசிரியர், தனது இடமாறுதல் கோரிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கல்வித்துறையில் இருக்கும் முறைகேடுகள் மற்றும் முரண்பாடுகள் உற்று நோக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
தற்போதுள்ள கல்வித்துறையின் நிலைமை சிறந்த செயல்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், பிற அரசுத்துறை அலுவலர்களை ஒப்பிடும்போது ஆசிரியர்களுக்கான வேலை நாள் மற்றும் நேரம் குறைவானது என்று குறிப்பிட்டார். இதன் காரணமாகவே ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது போன்றவற்றை பகுதிநேர வேலையாக செய்து வருகின்றனர் என்றும், இது ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல பரவி, பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் பேராசையை அதிகரிப்பதாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, டியூஷன் சென்டர் நடத்தும் மற்றும் வீடுகளில் டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், இதற்கென மாவட்டம் தோறும் சிறப்பு குழு ஒன்றை ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டார்.








