டெல்லி மாநகராட்சியில் 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாஜக ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 134 வார்டுகளை கைப்பற்றி டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி
டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது பாஜக மற்றும் ஆம் ஆத்மி மாறி மாறி முன்னிலை வகித்தன. பின்னர், பாஜகவை முந்தி ஆம் ஆத்மி முன்னிலை வகிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளை கைப்பற்றி டெல்லி மாநகராட்சியை தன்வசமாக்கியுள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 104 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 15 ஆண்டுகளாக பாஜகவின் வசம் இருந்த டெல்லி மாநகராட்சி, தற்போது ஆம் ஆத்மி வசம் சென்றுள்ளது.
இந்த வெற்றியையடுத்து டெல்லி மக்களுக்கு நன்றி கூறியுள்ள அம்மாநில முதலமைச்சரும் ஆம்ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், இனி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தூய்மையான மற்றும் அழகான டெல்லியை உருவாக்குவோம் எனக் கூறியுள்ளார்.
டெல்லி மாநில துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் மீது நம்பிக்கை வைத்த டெல்லி மக்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். உலகத்திலேயே மிகவும் எதிர்மறையான சிந்தனைகளை கொண்ட கட்சியை வீழ்த்தியிருப்பதாக பாஜகவை அவர் விமர்சித்தார். இதனை மிகப்பெரிய வெற்றியாக பார்க்காமல்,மிகப்பெரிய பொறுப்பாக பார்ப்பதாகவும் அவர் கூறினார்.







