மார்க் ஆண்டனியின் வெற்றியை அஜித் சாருக்கு சமர்பிக்கிறேன் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறினார்.
விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தை எஸ்.ஜே. சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழு முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் திரையரங்கில் வந்து பார்த்து ரசித்தனர். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பை பலரும் பாராட்டினர். இதையடுத்து விஷாலும், எஸ்.ஜே. சூர்யாவும் படத்தின் வரவேற்புக்கு அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றுள்ளது. அதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், ” நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின்போது அஜித் சாரை சந்தித்தபோது, ‘உன்னால் முடியும். நீ பெரிய படத்தை இயக்கு’ என நம்பிக்கை அளித்தது அவர்தான். மார்க் ஆண்டனியின் வெற்றியை அஜித் சாருக்கு சமர்பிக்கிறேன்” எனக் கூறினார்.







