கடலூர் என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கடலூர் அருகே என்கவுன்ட்டரில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சுப்புராயலு நகரைச் சேர்ந்தவர் வீரா என்கிற வீராங்கையன். பிரபல ரவுடியான இவருக்கு…

கடலூர் அருகே என்கவுன்ட்டரில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சுப்புராயலு நகரைச் சேர்ந்தவர் வீரா என்கிற வீராங்கையன். பிரபல ரவுடியான இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணமானது. வீரா, கடலூர் உழவர் சந்தை அருகில் பழக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் தன் வியாபாரத்தை முடித்த அவர், கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது வீட்டின் அருகே சென்ற வீராவை இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த பத்து பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளது.

கொடூரமாக வெட்டியும் ஆத்திரம் தீராத அந்த கும்பல், வீராவின் தலையை துண்டாக வெட்டி ஒரு பையில் போட்டுக்கொண்டு உடலை மட்டும் அங்கேயே விட்டுச் சென்றது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், புதுப்பேட்டை மலட்டாற்றில் குற்றவாளிகள் ஐந்து பேரை சுற்றி வளைத்தனர். அப்போது கிருஷ்ணா என்பவர் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புதுப்பேட்டை உதவி ஆய்வாளர் தீபனுக்கு கை மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து தற்காத்துக்கொள்வதற்காக கிருஷ்ணாவை போலீஸார் என்கவுண்டர் செய்தனர் .

இந்நிலையில், கிருஷ்ணா என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.