விமானத்தில் இறக்கை மேல் நின்றபடி ஊழியர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக விமானப் பயணம் என்பது மிகவும் இனிமையானது. ஒரு தடவையாவது விமானத்தில் பயணம் செய்து விட வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம். விமானப் பயணம் எவ்வளவு இனிமையானதோ அந்த அளவுக்கு ஆபத்தும் உள்ளது. கடுமையான விதிமுறைகளை பின்பற்றிய போதிலும் அவ்வப்போது விபத்துக்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. எனவே விமான நிறுவனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளன.
இந்நிலையில், சுவிஸ் இண்டர்நேஷ்னல் விமானத்தின் இறக்கை மேல் அந்த விமானத்தின் ஊழியர்கள் நின்றபடி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பியூனஸ் அயர்ஸில் உள்ள 777 போயிங் விமான இறக்கையில் செல்ஃபி எடுத்ததற்காக சுவிஸ்கேபின் குழுவினர் கடுமையான சிக்கலில் உள்ளனர்” என்று தலைப்புடன் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் இறக்கையின் மேல் நின்றபடி செல்பி எடுத்தும், போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த விமான நிறுவனத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அந்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் விமானம் எந்த பயணத்திட்டம் இல்லாமல் நின்றபோது தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.







