தமிழகத்தில் இரண்டாவது, மூன்றாவது அலை வர வாய்ப்பே இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உலக புற்றுநோய் தினத்தையொட்டி அகில இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கம் நடத்திய தமிழ்நாடு காவல்துறையினருக்கான புற்றுநோய் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் புற்றுநோய் பற்றிய அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை குணப்படுத்துவதற்கான அனைத்து மருத்துவ முறைகளும் இருப்பதாக கூறினார்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் இரண்டாவது, மூன்றாவது அலை பரவ வாய்ப்பே இல்லை என கூறினார். இருந்தாலும் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என கேட்டுக்கொண்டார். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராஜா முத்தையா கல்லூரி மாணவர்கள் வைத்த கோரிக்கைக்கு ஏற்ப அவர்களது கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும், இனி கடலூர் அரசு மருத்துவ கல்லூரியாக செயல்படும் என்றும், அரசு மருத்துவக் கல்லூரியில் பெறப்படும் கட்டணமே அந்த கல்லூரிக்கும் பொருந்தும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.







